உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே கல்குவாரிகளில் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

Published On 2022-10-22 12:21 IST   |   Update On 2022-10-22 16:58:00 IST
  • மக்களை அச்சுறுத்தும் வகையில் டிரைவர் இல்லாமல் கிளீனரை வைத்து லாரிகளை அதிவேகமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
  • கல்குவாரியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்:

திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தில் அரசு அனுமதியுடன் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டும் கல்குவாரி செயல்பட வேண்டும். ஆனால் கல்குவாரியில் போலியாக ரசீதுகளில் தேதி மற்றும் நேரத்தை மாற்றிக் கொண்டு அரசு முத்திரையை பதித்து தவறாக பயன்படுத்தி இரவு நேரங்களில் குவாரி செயல்பட்டு வருகிறது. மேலும் ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரிகள் இரவு நேரங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் டிரைவர் இல்லாமல் கிளீனரை வைத்து லாரிகளை அதிவேகமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கிராம மக்கள் 5 லாரிகளை சிறை பிடித்து டிரைவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினார்கள். இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க அனுமதி வழங்கியது யார்? குவாரி செயல்பட வேண்டிய நேரம் என்ன என்று சரமாரி கேள்விகளை எழுப்பி லாரி மற்றும் வாகன டிரைவர்களை சிறைபிடித்தனர்.

மேலும் இரவு நேரங்களில் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News