உள்ளூர் செய்திகள்

நண்பன் இறந்த துக்கத்தில் உயிரை துறந்த வாலிபர்

Published On 2023-04-14 16:27 IST   |   Update On 2023-04-14 16:27:00 IST
  • தனது நண்பன் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். சந்தோஷ் அடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்
  • உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுதா.

இவர்களுக்கு ராஜா (20). சஞ்சய் (17). என்ற மகன்களும், திவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

சஞ்சய் மற்றும் திவ்யா எழுவாம்பாடியில் உள்ள பாட்டி வசந்தா வீட்டில் தங்கி இருந்தனர். சஞ்சய் கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது சஞ்சய் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி கிடந்த சஞ்சயை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல பணம் இல்லாததால் கடந்த 11-ந் தேதி மாலை அரசு பஸ்ஸில் சென்னைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்று தெரியாமல் இது குறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சஞ்சய் அதே ஊரைச் சேர்ந்த கவியரசு மகன் சந்தோஷ் என்பவருடன் மாம்பட்டு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளார்.

இருவரும் உயிர் நண்பர்களாக பழகி வெளியில் சுற்றியுள்ளனர். 10-ம் வகுப்பில் இருவரும் தேர்ச்சி பெறாததால் படிப்பை தொடராமல் 2 ஆண்டுகளாக கிடைத்த கூலி வேலைக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வந்துள்ளனர். 2 பேரில் ஒருவருக்கு வேலை கிடைக்க வில்லையென்றால் 2 பேரும் வேலைக்கு செல்ல மாட்டார்களாம்.

இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சந்தோசை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது நண்பன் இறந்ததால் சஞ்சய் மன உளைச்சலில் காணப்பட்டு வந்தார். சந்தோஷ் அடக்கம் செய்த சுடுகாட்டிற்கு சென்று தினமும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இரவு நேரத்தில் தூங்காமல் எனது நண்பன் என்னை கூப்பிடுறான் அதனால் நான் அவனிடம் போகிறேன் என்றும் நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன் என் நண்பன் இடத்திற்கே போகிறேன் என்று தாயாரிடம் செல்போன் மூலம் கூறினார்.

ஆனால் பெற்றோர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏதோ விரக்தியில் பேசுகிறான் என்று நினைத்து விட்டனர். ஆனால் சஞ்சய் கூறியபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உயிர் நண்பனை பிரிந்த வேதனையில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எழுவாம்பாடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News