உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுனில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2023-11-21 13:07 IST   |   Update On 2023-11-21 13:07:00 IST
  • 3 பேர் சக்தியை வெட்டிவிட்டு ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.
  • போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுன் வயல் தெருவில் வசித்து வருபவர் சக்தி(வயது 37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான இடம் உள்ளது. தனது குழந்தையை பள்ளியில் இறக்கிவிட்டு, அந்த இடத்திற்கு இன்று காலை மொபட்டில் சக்தி சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்தியை சரமாரியாக வெட்டியது. இதில் கைகள் துண்டான நிலையில் சக்தி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சக்தியை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவரது குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சக்திக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தெரியவந்தது. இதனால் அங்குள்ள காய்கறி கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 பேர் சக்தியை வெட்டிவிட்டு ஓடும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

Similar News