திருப்பரங்குன்றத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை- குடிபோதையில் 3 பேர் வெறிச்செயல்
- தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது39). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், சர்தன் (12) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று இரவு சுரேஷ் தனது மகனுடன் தென்பரங்குன்றம் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 3 பேர் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுரேசை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுரேசை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தென்பரங்குன்றத்தை சேர்ந்த டேவிட்ராஜா என்பவரின் மகன் தீனதயாளன். கட்டிட தொழிலாளியான இவர், அந்த பகுதியில் அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனை சுரேஷ் கண்டித்து வந்திருக்கிறார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சுரேஷ் தனது மகனுடன் நிலையூர் பிரிவு பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு தீனதயாளன், தனது நண்பர்களான விக்னேஷ்வரன், சிங்கராஜா ஆகியோருடன் மது குடித்து கொண்டிருந்தார். சுரேசை பார்த்த அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் தனது நண்பர்களுடன் சுரேசுடன் தகராறு செய்தார்.
அப்போது அவர்கள் வாள் மற்றும் கத்தியால் சுரேசை அவரது மகனின் கண்முன் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தீனதயாளன், விக்னேஷ்வரன், சிங்க ராஜா ஆகிய 3 பேர் மீதும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.