உள்ளூர் செய்திகள்

தேவர் ஜெயந்தியில் போக்குவரத்து விதிமுறை மீறல்: மதுரை மாவட்டத்தில் 329 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2022-10-31 06:00 GMT   |   Update On 2022-10-31 06:00 GMT
  • பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் செல்வது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
  • போலீசார் டிரோன் கேமிராக்களை இயக்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மதுரை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதற்காக மதுரை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றன.

மதுரை மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் பயணிப்பவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனை கண்காணிக்கும் வகையில் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார், சாலைகளில் அதிநவீன கருவிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

பெரும்பாலான பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாகனங்கள் செல்வது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் போலீசார் டிரோன் கேமிராக்களை இயக்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுதவிர பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை வாங்கி போலீசார் சோதனை செய்தனர்.

இதற்கிடையே மதுரை புறநகரில் உள்ள சுற்றுவட்ட சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இதற்கான பணிகளில் சிலைமான், கருப்பாயூரரணி ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு அந்தந்த வாகனங்களின் பதிவு எண்கள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்படி மதுரை மாநகரில் 257 வாகனங்களும், புறநகரில் 72 வாகனங்களும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News