உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

மாணவர்களை தாக்கும் தலைமை ஆசிரியை மீது புகார்- போராட்டம் நடத்தப்போவதாக பெற்றோர் அறிவிப்பு

Published On 2023-08-11 07:41 GMT   |   Update On 2023-08-11 07:41 GMT
  • விடுமுறை நாட்களில் வகுப்பில் எடுத்த பாடங்களை ஏன் ஏழுதி வரவில்லை என கேட்டு மாணவனை தலைமை ஆசிரியை அடித்துள்ளார்.
  • அதிகாரிகள் தலைமை ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மாயவன் (வயது38). கூலித்தொழிலாளி. இவருக்கு கவுதம் (வயது13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கவுதம் பிலாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை. மீண்டும் பள்ளிக்கு வந்தபோது அவரை தலைமை ஆசிரியர் சாந்தி கண்டித்துள்ளதாக தெரிகிறது. விடுமுறை நாட்களில் வகுப்பில் எடுத்த பாடங்களை ஏன் ஏழுதி வரவில்லை என கேட்டு அவரை அடித்துள்ளார். இதனால் கவுதம் மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இது குறித்து மாயவன் கேட்டபோது நடந்த விவரங்களை கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாயவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். அந்த புகாரில் தலைமை ஆசிரியர் சாந்தி தொடர்ந்து இதேபோல் பள்ளி மாணவர்களை தாக்கி மிரட்டி வருகிறார். நாங்களும் இது குறித்து புகார் சொல்லாமல் இருந்து வந்தோம். ஆனால் தற்போது வரம்பு மீறி செயல்படுவதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதையே நிறுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனைப்போலவே பல குழந்தைகள் இதுபோல் பாதிப்படைந்து வருகின்றனர். அதிகாரிகள் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

இது குறித்து வட்டார கல்வி அதிகாரியிடம் கேட்டபோது மாணவன் தாக்கப்பட்டது குறித்து புகார் தற்போது போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News