உள்ளூர் செய்திகள்

பழனியில் ஜவுளிக்கடையில் காவலாளிகளை தாக்கி துணிகள் திருட்டு

Published On 2022-11-29 11:29 IST   |   Update On 2022-11-29 11:29:00 IST
  • கடைக்கு வந்த மர்ம கும்பல் காவலாளிகள் 2 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
  • கடைக்குள் புகுந்து காவலாளியை தாக்கி ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோதி கணேஷ் (வயது 35). இவர் பழனி-திண்டுக்கல் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் 2 காவலாளிகள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கடைக்கு வந்த மர்ம கும்பல் காவலாளிகள் 2 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மயக்கமடைந்து விட்டனர். அதன் பிறகு கடையை உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பல் கடைக்குள் இருந்த அனைத்து ஜவுளிகளையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

அதன் பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மயக்கமடைந்து கிடந்த காவலாளிகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து ஜோதி கணேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.2 கோடிக்கும் மேல் மதிப்பிலான ஜவுளிகள் அனைத்தும் திருடு போனதாக தெரிவித்தார். மேலும் முன் விரோதம் காரணமாக தனது கடையை உடைத்து சிலர் திருடிச் சென்றிருக்கலாம் என அவர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையை உடைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள கடைக்குள் புகுந்து காவலாளியை தாக்கி ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News