ஊட்டியில் மலை காய்கறிகள் கொள்முதல் விலை உயர்வு
- காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
- ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
அங்கு மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.20 வரை விற்பனையாகி வந்தது. தற்போது கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்ற பீட்ரூட் ரூ.55-க்கும், ரூ.100-க்கு விற்ற அவரை ரூ.140-க்கும், ரூ.25-க்கு விற்ற கேரட் ரூ.40-க்கும், பட்டாணி கிலோ ரூ.120-க்கும் விற்பனையாகின. பெரும்பாலான காய்கறிகளின் விலை நேற்று உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேவேளையில் கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பீன்ஸ், நேற்று ரூ.50-க்கு மட்டுமே விலை போனது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலை காரணமாக இங்குள்ள பீன்ஸ் சமவெளி பகுதிகளில் கூடுதல் விலைக்கு போகும். கடந்த சில வாரங்களாக தாளவாடி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பீன்ஸ் வரத்து அதிகரித்துள்ளது. அங்கிருந்து வரும் பீன்ஸ் விலை குறைவாக இருப்பதால் நீலகிரி பீன்ஸ் விலை சரிந்துள்ளது.