உள்ளூர் செய்திகள்

திருமண மண்டபத்தில் மணமகன் திடீர் மாயம்- மணப்பெண் வீட்டார் அதிர்ச்சி

Published On 2023-02-01 09:33 GMT   |   Update On 2023-02-01 09:33 GMT
  • உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
  • முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம்:

கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அருகே வரகூர் பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று வந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கினர்.

இன்று காலையில் வெகுநேரமாகியும் அறையை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News