உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2022-09-16 06:33 GMT   |   Update On 2022-09-16 06:33 GMT
  • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிபாபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • பலத்த காயம் அடைந்த ஹரிபாபுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த கம்மார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி பாபு. வக்கீலான இவர், அ.தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக இருந்தார். இவர் பொன்னேரி அடுத்த மனோபுரம் கோயில் திருவிழாவில் கூத்து பார்ப்பதற்காக கம்மார்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஹரிபாபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரிபாபுவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஹரிபாபு இறந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). கூலித்தொழிலாளி. இவர் மகன் தனசேகரனை பொன்னேரியில் உள்ள கல்லூரியில் சேர்க்க சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வந்தபோது, ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள்மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News