உள்ளூர் செய்திகள்

ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வகுப்பறையில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து பலி

Published On 2022-09-21 08:10 GMT   |   Update On 2022-09-21 08:10 GMT
  • ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வகுப்பறையில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மாணவரின் தாய் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரகுமான். இவரது மனைவி ஜசீர். இவர்களது மகன் நிஜாஸ்(வயது22). இவர் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மாணவர் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் இவர் வகுப்பறையில் அமர்ந்து மருத்துவம் தொடர்பான பாடங்களை படித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார்.

உடனே சக மாணவர்கள் நிஜாசை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நிஜாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அவருடன் படித்த சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாணவரின் தாய் ஜசீருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கேரளாவில் இருந்து புதுவை விரைந்து வந்தார். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவரின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News