உள்ளூர் செய்திகள்

குறிஞ்சிப்பாடியில் ஸ்டூடியோ உரிமையாளரை சுற்றி வளைத்து கொலை செய்த மர்ம கும்பல்

Published On 2023-02-28 12:07 IST   |   Update On 2023-02-28 12:07:00 IST
  • மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நேற்று இரவு கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  • கொலை செய்து விட்டு தப்பிய மர்மக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மந்தாரக்குப்பம்:

குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

இவர் நேற்று இரவு வழக்கம் போல ஸ்டூடியோவை முடிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் அருகில் வந்தபோது மர்மக் கும்பல் சுந்தரமூர்த்தியை வழிமறித்து சுற்றிவளைத்தனர். மர்மக்கும்பல் வைத்திருந்த கத்தியால் சுந்தரமூர்த்திைய சரமாறியாக வெட்டினர். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். இது குறித்து அங்கிருந்த குடிமகன்கள் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக சுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பிய மர்மக்கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நேற்று இரவு கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News