உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்துக்கு காரணம் என்ன?- முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

Published On 2023-07-31 16:20 IST   |   Update On 2023-07-31 16:20:00 IST
  • காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன்.
  • புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் விபத்து குறித்து கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (வயது30) என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நான் பழையபேட்டை நேதாஜி சாலையில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன். எனக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 29-ந்தேதி அன்று எனது வாட்டர் கம்பெனியில் இருந்த போது டமார் என்று பெரிய அளவில் சத்தம் கேட்டது. நான் சென்று பார்த்த போது அருகில் ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டல் கடையின் சுவர் இடிந்து விழுந்து விட்டது.

நானும், அருகில் இருந்த முருகேசன், எனது மாமா அந்தோணி ஆரோக்கியராஜ் ஆகியோர் தொலைவில் நின்று பார்த்த போது ராஜேஸ்வரியின் ஓட்டல் கடை அருகில் இருந்த கடைகள், ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தது. மேலும் பட்டாசு கடையில் வெடிகள் வெடித்து புகை மண்டலமாக இருந்தது.

ஒரே அலறல் சத்தம் கேட்டது. கடைகள் வரிசையாக இடிந்து தரைமட்டம் ஆகி விட்டது.

இதில் இம்ரான், இப்ராஹிம் கலிவுல்லா, ருத்திகா, ருத்தேஷ், ரவி, ராஜேஸ்வரி, சிவராஜ், ஜேம்ஸ், சரசு ஆகிய 9 பேர் இறந்தது தெரிய வந்தது.

இது பற்றி விசாரித்த போது ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் பட்டாசு கடைக்கு தீ பரவி பட்டாசுகள் வெடித்து கடைகள் சேதமடைந்து அனைத்து கடைகளும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News