உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த 72 வயது முதியவரை விஷம் கொடுத்து கொன்று பணம் கொள்ளை

Published On 2023-04-07 11:16 IST   |   Update On 2023-04-07 16:47:00 IST
  • கோவிந்தன் வீட்டி நகை-பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
  • கோவிந்தன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த நீர் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.

இவரது மகன், மகள் திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வருகிறார்கள். இதனால் கோவிந்தன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோவிந்தன் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோவிந்தன் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது உடலில் எந்த காயமும் இல்லை. வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிந்தனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கோவிந்தன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வந்த மர்ம கும்மபல் அவருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

கோவிந்தன் வீட்டில் நகை-பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அவருக்கு நன்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து கோவிந்தன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News