காஞ்சிபுரம் ரேஷன் கடை முன்மாதிரி கடையாக தேர்வு: வைபை வசதி-பூங்கா உள்ளது
- கடை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
- வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை பெரிதும் கவருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு, கணேஷ் நகரில் ரேசன் கடை உள்ளது. இந்த கடை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த ரேஷன் கடையில் எந்த நேரமும் ஸ்மார்ட் கார்டு வேலை செய்யும் வகையில் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடை முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்கள் உள்ளது.
மேலும் வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை பெரிதும் கவருகிறது.
உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் ஒதுக்கிய அனைத்து நிதியும் முழுமையாக வீணடிக்காமல் செலவு செய்து கூடுதலாகவும் தனது சொந்த பணத்தை செலவிட்டு கவுன்சிலர் கார்த்திக் இந்த ரேசன் கடை கட்ட ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காஞ்சிபுரம் கணேஷ் நகர் ரேஷன் கடை முன்மாதிரி கடையாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.