உள்ளூர் செய்திகள்

சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

Published On 2022-08-25 03:57 GMT   |   Update On 2022-08-25 03:57 GMT
  • ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி மாநாடு நடத்த உள்ளோம்.
  • தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

சென்னை:

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் செப்டம்பர் 10-ல் நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டோ ஜியோ சார்பில் முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்திய போதும், எங்களது மனுவை கூட பெறவில்லை.

தற்போதைய தி.மு.க. அரசு ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. எங்களது கோரிக்கை மனுவையும் முதல்-அமைச்சரிடம் வழங்கி உள்ளோம்.

முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியபோது, குறைந்த பட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. அதனால் போராட்டங்களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறார்.

ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி மாநாடு நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News