உள்ளூர் செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவர் கைது

Published On 2023-08-08 04:58 GMT   |   Update On 2023-08-08 04:58 GMT
  • தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
  • நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

ராசிபுரம்:

சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (33). வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற 1 மகளும், கோகுல் (7) என்ற 1 மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 3 மாதங்களாக நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா (63) குடும்பத்தினருடன் கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கோவிந்தனுக்கு மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் இருந்த கோவிந்தன், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு சரமாரியாக தாக்கினார்.

இதை கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவை நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News