உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இட்லி சாப்பிட்ட ஓட்டல் தொழிலாளி திடீர் மரணம்

Published On 2023-01-18 10:44 IST   |   Update On 2023-01-18 10:44:00 IST
  • குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? சாப்பிடும் போது தொண்டையில் இட்லி சிக்கியதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இட்லி சாப்பிட்ட போது தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

ராணிப்பேட்டை அருகே உள்ள காரையைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் வேலூர் புதிய பஸ் நிலையம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

ஓட்டல் பின்புறம் உள்ள அறையில் குமார் தங்கியிருந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று ஓட்டல் விடுமுறை என்பதால் குமார் அவர் தங்கி இருந்த அறையில் இருந்தார்.

குமார் இரவு இட்லி சாப்பிட்டார். அப்போது இட்லி அவரது தொண்டையில் சிக்கியதாக தெரிகிறது. பாதி இட்லி தொண்டையில் இருந்தபடி குமார் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட சக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல் தொழிலாளி குமார் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? சாப்பிடும் போது தொண்டையில் இட்லி சிக்கியதா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்லி சாப்பிட்ட போது தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News