ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
- காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடாக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.
பென்னாகரம்:
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிரிக்க தொடங்கியது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் கனமழை காரணமாக இன்று காலை, வினாடிக்கு நீர்வரத்து 5845 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக, அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் 2673 கனஅடி வெளியேற்றப்பட்டது.
இதேபோன்று கபினி அணைக்கு இன்று காலை, நீர்வரத்து 2359 கன அடி வந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 4 ஆயிரத்து 673 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடாக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தமிழகம் வந்தடைந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடித்து இருந்தது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் ஒகேனக்கல்லுக்கு இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.