உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2023-09-13 08:04 GMT   |   Update On 2023-09-13 08:04 GMT
  • ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றன.
  • சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

பென்னாகரம்:

காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்தது.

இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தும் படிப்படியாக சரிந்து நேற்று முன்தினம் 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்த நிலையில் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றன. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு இன்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பரிசலில் சவாரி செய்தனர்.

Tags:    

Similar News