உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-08-16 07:41 GMT   |   Update On 2022-08-16 07:41 GMT
  • கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்.

மதுரை:

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்டு 19 மற்றும் 20-ந் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தனது உத்தரவில், கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்.

இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News