உள்ளூர் செய்திகள்

கொங்கணாபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை மயங்கி விழுந்து சாவு

Published On 2022-12-02 14:21 IST   |   Update On 2022-12-02 14:21:00 IST
  • கொங்கணாபுரம் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை, வழியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஆசிரியை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எடப்பாடி:

தூத்துக்குடி மாவட்டம், பழனியாபுரம், கருங்கடல் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகள் சுஜிதா (42). இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

திருமணமாகி விவாகரத்து பெற்ற சுஜிதா, அவரது சகோதரி ரீனாவுடன் கொங்கணாபுரம் அருகே உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இவர் தற்போது கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழகவுண்டன் வளவு அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக சுஜிதா ரங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது சகோதரி ரீனா, அருகில் இருந்தவர்கள் உதவியுடன், ஆசிரியை சுஜிதாவை மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சுஜிதா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியை, பஸ் நிறுத்த பகுதியில் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News