உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே பள்ளி விழாவில் சாமியாடிய மாணவிகளால் பரபரப்பு

Published On 2024-02-12 11:15 GMT   |   Update On 2024-02-12 11:15 GMT
  • ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
  • பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி பள்ளி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அப்போது கருப்பசாமி பாட்டுக்கு மாணவர் ஒருவர் உடல் முழுவதும் கருப்பு நிற சாயம் பூசி கையில் அரிவாளுடன் நடனமாட அந்த பாட்டுக்கு மற்ற மாணவர்கள் பாடல் பாடிக்கொண்டு இருந்தனர்.

இதை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் உணர்ச்சிகரமாக அருள்வந்து ஆடினர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News