உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை கடத்தி கொள்ளை- 7 பேர் கும்பல் துணிகரம்

Published On 2022-08-28 13:45 IST   |   Update On 2022-08-28 13:45:00 IST
  • தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
  • உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போரூர்:

சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் சஞ்சய். தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வளசரவாக்கம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அன்பு நகர் பகுதியில் வந்தபோது பெட்ரோல் இல்லாததால் மோட்டார் சைக்கிள் திடீரென நின்றுவிட்டது.

இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.

அப்போது அவழியே மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் அத்வைத்திடம் பெட்ரோல் பங்க் வரை மோட்டார் சைக்கிள் "டோப்" செய்து உதவி செய்வதாக கூறினர். இதை உண்மை என்று நம்பிய அத்வைத்தும், சஞ்சய்யும் மோட்டார்சைக்கிளில் அமர்ந்தபடி அந்த கும்பலுடன் சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் 7 பேர் கும்பல் திடீரென 2 பேரையும் கத்திமுனையில் மிரட்டினர்.

பின்னர் இருவரையும் பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்று கத்திமுனையில் அத்வைத் அணிந்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வாட்ச், ரூ.3 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள "இயர் பேடு" ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம கும்பலை பிடிக்க கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News