உள்ளூர் செய்திகள்

செல்போன் டவரில் ஏறி போதை வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2024-02-20 10:45 GMT   |   Update On 2024-02-20 10:45 GMT
  • செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பொள்ளாதி கிராமம், சின்னத்தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள செல்போன் டவர் உச்சியில் நின்றபடி ஒரு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபரின் பெயர் சந்திரன் (வயது 25) என்பதும், இதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

சின்னத்தொட்டியம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சந்திரன் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த வார்டு கவுன்சிலர் சுரேஷ் என்பவர், குடிபோதையில் இருந்த சந்திரனை கண்டித்து உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சந்திரன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து வார்டு கவுன்சிலர் சுரேஷை சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டுக்கு சென்ற சந்திரன் அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கையில் குத்திக்கொண்டு ரத்தக்காயங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சின்னதொட்டிபாளையம் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய சந்திரன் அங்கிருந்தபடி, நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மிரட்டல் விடுத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து செல்போன் டவரில் நின்ற சந்திரனிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்போன் டவரை சுற்றிலும் பாதுகாப்பு வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் நைசாக செல்போன் டவரின் மேல் ஏறி சென்று, அங்கு இருந்த சந்திரனை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு கையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News