ஈரோட்டில் இன்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.34 லட்சம் பணம் பறிமுதல்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 150 ரூபாய் இருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நிலை கண்காணிப்பு குழுவினர் வெண்டிபாளையம் ரெயில்வே கேட்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 150 ரூபாய் இருந்தது.
அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் பெயர் கவின் (21)என்பதும் கரூரில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. பணத்திற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை.
இதனையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தெரிவித்தனர்.