ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட சுயேச்சைகள் வேட்பு மனு வாபஸ்
- காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
- இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி நிறைவடைந்தது.
இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி. தினகரன் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க. நாம்தமிழர் கட்சி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மனு வாபஸ் பெறுவதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ்.அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். இதையடுத்து அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
மாலை 3 மணிக்கு பின்னர் தான் வேட்பு மனுக்களை எத்தனை பேர் வாபஸ் பெற்றனர் என்ற முழு விபரமும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.