தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் 27 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி
- தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனைத்தொடர்ந்து தேர்தலில் துணை ராணுவத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 5 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு குழுவில் 80 பேர் வீதம் 400-க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.
இதுதவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 160 பேரும் வந்துள்ளனர். இதில் துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறும்போது,
தேர்தல் நெருங்கி வருவதால் வாகன சோதனையை தீவிரபடுத்தியுள்ளோம். ஈரோடு கிழக்கு பகுதியில் மொத்தம் 27 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை தீவிரபடுத்தியுள்ளோம்.
இது தவிர 7 கார் குழுக்கள், 15 மோட்டார் சைக்கிள் குழுக்கள் தனித்தனியாக பிரிந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சோதனை மேலும் தீவிரபடுத்தப்படும் என்றார்.