உள்ளூர் செய்திகள்

சரக்கு வாகனங்களை வழி மறித்து நின்ற காட்டு யானையால் பரபரப்பு

Published On 2024-01-30 11:57 GMT   |   Update On 2024-01-30 11:57 GMT
  • காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
  • யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம்-கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக கரும்புக்கட்டுகள், காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலை நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

இதையடுத்து வாகனங்களை வழிமறைத்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள், உணவு ஏதாவது உள்ளதா? என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி அலைந்தது.

இந்த காட்சியை அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் இருந்த பயணிகள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News