உள்ளூர் செய்திகள்

சங்கர் நகர் போலீசில் மனைவி புகார்- வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறியதால் டிரைவர் தற்கொலை

Published On 2022-08-12 10:33 GMT   |   Update On 2022-08-12 10:33 GMT
  • டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் டிரைவர் தூக்கில் தொங்கி உள்ளார்.
  • டிரைவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (38). இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபுரிந்த வந்தார்.

இவருக்கு சுனிதா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் ஒருவருடன் அலாவுதீன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி அலாவுதீனின் மனைவியிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கர்நகர் போலீசில் புகார் அளித்தார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் அலாவுதீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் தூக்கில் தொங்கி உள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இருந்தது. அதில் அலாவுதீன் கூறி இருப்பதாவது:-

ஆஸ்பத்திரியில் நான் ஒரு பெண்ணுடன் சகஜமாக பேசுவதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அந்த பெண்ணுடன் என்னை தொடர்புபடுத்தி பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது சாவுக்கு ஆஸ்பத்திரி உரிமையாளரும், மேலும் சில பெண் ஊழியர்களுமே காரணம். என்னையும் அந்த பெண்ணையும் அவமானப்படுத்தியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் தற்கொலை செய்கிறேன்.

இவ்வாறு அலாவுதீன் வீடியோவில் வாக்குமூலம் போன்று பதிவு செய்து வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News