உள்ளூர் செய்திகள்

வேலூர் அருகே தீபாவளி செலவுக்கு திருட வந்த வாலிபர்கள் கைது

Published On 2023-11-10 05:02 GMT   |   Update On 2023-11-10 05:55 GMT
  • போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
  • தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார், பொய்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்கை சமத்துவபுரம் சமுதாயக்கூடம் அருகில், சந்தேகம்படும்படி 2 பைக்குகளில் 6 பேர் சுற்றித்திரிந்தனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் ஜீப்பில் துரத்திச்சென்று ஒரு பைக்கை மடக்கி, 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் இம்மானுவேல் என்கிற வெள்ளை விஜய் ( வயது 23) மற்றும் சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற போண்டா சதீஷ் (20) என்பது தெரிய வந்தது.

மேலும், தீபாவளி செலவுக்காக வேலூர் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு குழுவாக அவர்கள் சுற்றித் திரிந்ததும், அவர்கள் ஓட்டி வந்த பைக், வில்லிவாக்கம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பைக், 2 கத்தி, இரும்பு கம்பிகள், கயிறு மற்றும் மிளகாய் பொடி டப்பா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News