தனியார் பள்ளி ஆசிரியையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள்- வாலிபர் கைது
- 3 பேரும் சேர்ந்து ரேவதி கத்தியை எடுத்து கையை கிழித்துள்ளனர். மேலும் அவரை கட்டையாலும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தனர்.
- ரேவதி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ரேவதி (வயது32).
இவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், அவரது உறவினர்களான கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாதையன் (50), அவரது மகன் காந்தி என்கிற சக்தி (28), மாரி (45) ஆகியோருக்கு இடையே சொத்து பிரிப்பது காரணமாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வந்த ரேவதி உறவினர்களிடம் சென்று சொத்து பிரிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் 3 பேரும் சேர்ந்து ரேவதி கத்தியை எடுத்து கையை கிழித்துள்ளனர். மேலும் அவரை கட்டையாலும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதில் காயமடைந்த ரேவதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ரேவதி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிவு செய்து காந்தி என்கிற சக்தியை கைது செய்தனர். மற்ற 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.