உள்ளூர் செய்திகள்

எருமப்பட்டி அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்தது ஏன்?: உருக்கமான தகவல்கள் வெளியானது

Published On 2023-10-10 14:52 IST   |   Update On 2023-10-10 14:52:00 IST
  • பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை.
  • நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (46). இவர்களுக்கு புனிதா(29) என்ற மகளும், கண்ணதாசன்(26) என்ற மகனும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். கண்ணதாசன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கண்ணதாசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பெரியசாமி, சாந்தா ஆகியோர் வீட்டின் விட்டத்தில் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் இதுகுறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் பெரியசாமி, சாந்தாவின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இவருடைய மனைவி சாந்தாவுக்கும் கர்ப்பப்பை கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தா தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அடிக்கடி வலியால் சாந்தாவும், பெரியசாமியும் அவதிபட்டு வந்தனர்.

இதனிடையே இவர்களது மகன் கண்ணதாசன் மது பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரின் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்த தம்பதி, மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததாலும், நோய் தாக்கத்தாலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Tags:    

Similar News