உள்ளூர் செய்திகள்

சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி போக்சோவில் கைது- 3 மாத கர்ப்பத்தால் பெற்றோர் அதிர்ச்சி

Published On 2022-10-11 07:03 GMT   |   Update On 2022-10-11 07:03 GMT
  • மாணவன் யாரிடமும் அதிகமாக பேச மாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர்.
  • போலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் கல்லூரி மாணவன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் 12-ம் வகுப்பு முடித்து காரிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர்ந்தார். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடினர்.

எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். தொடர்ந்து தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து அந்த மாணவருடன் நட்பாக இருந்தது யார்? யார்? என போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த மாணவன் யாரிடமும் அதிகமாக பேச மாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் கல்லூரி மாணவன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அங்கு சென்று பார்த்த போது அவருடன் ஒரு இளம்பெண் இருந்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த பெண் அதே கல்லூரியில் படித்த மாணவி என்பதும் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். மாணவனுக்கு 18 வயது முடியாத நிலையில் இளம்பெண்ணின் அழைப்பை ஏற்று அவன் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு பேரிகையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி உள்ளனர்.

சிறுவனை கடத்தி சென்று திருமணம் செய்ததாக குழந்தை திருமண தடுப்பு சட்டம், அவனுடன் உல்லாசமாக இருந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் மாணவி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அந்த மாணவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். சிறுவன் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Tags:    

Similar News