திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் பஸ் தினம் கொண்டாடிய மாணவர்கள் 40 பேர் மீது வழக்கு
- பஸ் மற்றும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணித்தும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர்.
- மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தை டிரைவர் கண்டக்டர்கள் அனுமதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் செய்யாறில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் பஸ் தினம் கொண்டாடினர். ஆரணி அடுத்த இரும்பேடு கூட்டு சாலையில் தனியார் பஸ் மற்றும் சரக்கு வாகனத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். பஸ் மற்றும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணித்தும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். போலீசார் எச்சரித்து அறிவுறுத்திய பிறகும் பஸ் தினத்தை மாணவர்கள் கொண்டாடினர்.
இதற்கு தனியார் வாகன டிரைவர்களும் துணையாக இருந்தனர்.இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரணி பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் தனியார் பஸ் டிரைவர் தயாளன் (வயது 60). முள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் சரவணன் (39) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் கல்லூரி மாணவர்கள் 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்யார் பகுதியில் நேற்று முன்தினம் பஸ் தினம் கொண்டாடிய மாணவர்கள் மீது செய்யாறு போலீஸ் நிலையத்திலும் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகரில் பஸ் தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் நேற்று முன்தினம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் திருவண்ணாமலை அடுத்த தீபம் நகரில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பஸ் தின கொண்டாட்டம் என்ற பெயரில் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர்.
செய்யாறு, ஆரணி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் பஸ் தின கொண்டாட்டத்தை டிரைவர் கண்டக்டர்கள் அனுமதிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.