உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2023-08-20 06:24 GMT   |   Update On 2023-08-20 06:24 GMT
  • மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
  • விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

செஞ்சி:

புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News