முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு, டி.வி. நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபரிடம் போலீசார் விசாரணை
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
- குடும்பத்தினரிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்களாகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் வீடு மற்றும் டி.வி. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த எலக்ட்ரீஷியன் செல்வம் (41) என்பவரை நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவரது குடும்பத்தினரிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்களாகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
போலீசார் அவரது மருத்துவ சான்றுகளையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபரை எச்சரித்து இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.