உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. ஆதரவாளரின் கார் எரிப்பு வழக்கில் 3 பேர் கைது

Published On 2022-09-28 04:03 GMT   |   Update On 2022-09-28 04:06 GMT
  • மனோஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.
  • அதன்படி ராமநாதபுரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:

தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

ராமநாதபுரம் கேணிக்கரை திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் பா.ஜ.க. ஆதரவாளரான அரசு டாக்டர் மனோஜ்குமார் கிளினிக்கில் நிறுத்தப்பட்ட 2 கார்களுக்கு 3 மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து டூவீலரில் தப்பினர்.

தீப்பற்றியதும் பக்கத்து வீட்டாரின் சத்தம் கேட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அதிக சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து டாக்டர் மனோஜ்குமாா் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினா்.

அதன்படி ராமநாதபுரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் விசாரணை நடந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (28), அப்துல் அஜிஸ் (30) ஆகியோரையும் கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

Tags:    

Similar News