ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து சிக்னல் கம்பம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு
- ஊத்துக்கோட்டையில் 4 ரோடுகள் சந்திப்பில் அண்ணா சிலை உள்ளது.
- போக்குவரத்து சிக்னல் கம்பம் இடிந்து விழுந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் 4 ரோடுகள் சந்திப்பில் அண்ணா சிலை உள்ளது. இதை ஒட்டி வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து சிக்னல் கம்பம் உள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் 20 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.
4 ரோடு சந்திப்பு எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். நேற்று இரவு 7 மணி அளவில் போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென்று உடைந்து விழுந்தது. இதை கண்ட அங்கிருந்த மக்கள் அலறியடித்து சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
போக்குவரத்து சிக்னல் கம்பம் இடிந்து விழுந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இடிந்து விழுந்த டிராபிக் கம்பத்தை அகற்றினர். அதன் பின்னர் வாகன போக்குவரத்து சீர் அடைந்தது.