உள்ளூர் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

Published On 2022-07-26 14:42 IST   |   Update On 2022-07-26 14:42:00 IST
  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜலட்சுமி.
  • கொரட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அம்பத்தூர்:

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (வயது74). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகள் பெங்களூருவில் இருப்பதால் ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

நேற்று மாலை இவருடைய வீட்டுக்கு 2 டிப்-டாப் வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களை மாநகராட்சி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர்.

திடீரென அவர்கள் மூதாட்டி ராஜலட்சுமியை தாக்கி கீழே தள்ளிவிட்டு கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த முகமூடியை ராஜலட்சுமியின் தலையில் மாட்டிவிட்டனர். சத்தம் போடாமல் இருக்கஅவரது வாயில் துணியை வைத்து அடைத்தனர். இதனால் மூதாட்டி ராஜலட்சுமி நிலைகுலைந்தார்.

உடனே மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்தனர். பின்னர் வீட்டில் வேறு ஏதேனும் சிக்குமா? என்று தேடிப்பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்காததால் நகையுடன் மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் எழுந்த ராஜலட்சுமி இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் கொரட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ராஜலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கை வரிசை காட்டி உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News