செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய 6 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது
- ரேஷன் அரிசி கடத்துபவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.
- செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மர்மநபர்கள் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்தி கூடுதல் விலைக்கு விற்பது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்துபவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில் செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் அதிகாரிகள் வடகரையில் உள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 200 மூட்டைகளில் 6 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், தங்கராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.