உள்ளூர் செய்திகள்

டீக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2023-11-27 09:04 GMT   |   Update On 2023-11-27 09:04 GMT
  • வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
  • குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு:

தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வபோது ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெருந்துறையில் கல்லூரி பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News