உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2023-10-29 06:46 GMT   |   Update On 2023-10-29 06:46 GMT
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்:

பூந்தமல்லி அருகே உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோலப்பஞ்சேரி கூட்டுறவு வங்கி அருகே உள்ள முட்புதரில் சந்தேகப்படும்படி 6 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் திருமழிசை உடையார் கோவில் பகுதியை சேர்ந்த வேலன் (22), மணிமாறன்(21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிக்க வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News