உள்ளூர் செய்திகள்

கட்டிகானப்பள்ளி அரசு பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்திற்கு களப்பயணம்

Published On 2023-03-02 09:46 GMT   |   Update On 2023-03-02 09:46 GMT
  • ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்றனர்.
  • பெருங்கற்கால மண்பாண்டங்கள், வரலாற்றுக் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிக்கானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஜே.ஆர்.சி., ஆகிய அமைப்புகள் இணைந்து, அரசு அருங்காட்சியகம் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திம்மராஜ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜே.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் கவிதா, உதவி தலைமை ஆசிரியர் சாந்தி, சமூக அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வி, தமிழாசிரியர் விஜயகுமார் ஆகியோருடன் 45 மாணவ, மாணவிகள் களப்பயணம் சென்று பார்வையிட்டனர்.

இதில், அரசு அருங்காட்சியகம் சென்ற மாணவ, மாணவிகளுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல் பொருள் சான்றுக்கான நடுகல், பாறைக்கல்வெட்டு, மாவட்ட வரலாற்றை குறிக்கும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள புதிய கற்கால கருவிகள், பெருங்கற்கால மண்பாண்டங்கள், வரலாற்றுக் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும், மனித உடலியல் பாகங்கள், புவியியல் பகுதி மற்றும் ஓவியங்கள் போன்ற கலைப்பொருட்கள் குறித்தும் மாணவர்கள் விரிவாக அறிந்து கொண்டனர். போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி மற்றும் போர்வாட்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. ஆவின் பால் உற்பத்தி நிலையத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள், பால் பொருள் உற்பத்தி, நெய் தயாரிக்கும் இடம், பால் பதப்படுத்தும் இடம், பாலில் இருந்து பல்வேறு உப பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளை பார்வையிட்டனர்.

Tags:    

Similar News