தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு
- பூஜைகள் செய்த தேங்காய்களை உடைத்து வீரபத்திர சுவாமியை வழிபட்டனர்.
- பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே சில்லாரஅள்ளி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குரும்பர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குலதெய்வமான வீரபத்ரசாமி திருவிழா கொண்டாடும் வகையில் ஊர் தர்மகர்த்தா சேகர் தலைமையில் விழாநடைபெற்றது.
சாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து காலை முதல் வீரபத்ர சுவாமி, பாரூர் அப்பன் சுவாமி, தொட்டில் அம்மன், வீரம்மாள் உள்ளிட்ட குல தெய்வங்களை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையின் மீது பூஜைகள் செய்த தேங்காய்களை உடைத்து வீரபத்திர சுவாமியை வழிபட்டனர்.
மேலும் மேளதாளத்துடன் பக்தர்கள் நடனம் ஆடியவாறு தலையில் தேங்காய் உடைத்துநேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.