உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி
- இரண்டு நாள் டென்னிஸ் போட்டி துவங்கியது.
- 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான இரண்டு நாள் டென்னிஸ் போட்டி துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் சார்பில், இரண்டாவது மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. இதில், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒற்றையர் பிரிவாக நடக்கும் இப்போட்டிகளை மாவட்ட டென்னிஸ் அசோசியேசன் தலைவர் யுவராஜ், தானம்பட்டி சுகாதார ஆய்வாளர் கலைவேந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் போஜிராஜ்வர்மா கலந்து கொண்டார்.
இதற்கான இறுதிப் போட்டி இன்று (30ம் தேதி) நடக்கிறது.