உள்ளூர் செய்திகள்

தருமபுரி, கிருஷ்ணகிரியில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Published On 2023-04-10 15:27 IST   |   Update On 2023-04-10 15:27:00 IST
  • பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

கிருஷ்ணகிரி,

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்- ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையொட்டி விநாயகருக்கு, 508 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

இதே போல், கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினை தீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News