கிராம மக்கள் ஆற்று வெள்ளத்தை பூஜை செய்து வழிபட்ட போது எடுத்த படம்.
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தெப்பம் விட்டு சிறப்பு பூஜைகள்
- ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தொடும் அளவிற்கு ஆற்றில் நீர் பாய்ந்தோடுகிறது.
- பாய்ந்தோடும் தண்ணீருக்கு தேற்று மாலை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர சாமி கோவிலையொட்டிய பகுதியில் தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடுகிறது.
சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
அந்தப் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை தொடும் அளவிற்கு ஆற்றில் நீர் பாய்ந்தோடுகிறது.
இந்த நிலையில், தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சாமி கோவில் நிர்வாகம் சார்பில் ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீருக்கு தேற்று மாலை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அப்போது, உற்சவ மூர்த்தியை ஆற்றங்கரையோரத்தில் அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, ஆற்று நீருக்கும் தீபாராதனை செய்து தெப்பம் விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று கரை புரண்டோடும் ஆற்று நீர் வெள்ளம் காரணமாக தக்ஷின பினாகினி என்று அழைக்கப்படும் தென்பெண்ணை ஆற்றை கங்கை அம்மனாக கருதி, அங்குள்ள மக்களை பாதுகாக்க வேண்டியும், உக்கிரம் கொண்ட கங்கை அம்மனை சாந்தப்படுத்தும் விதமாகவும், வாரணாசியில் உள்ள கங்கா தேவிக்கு செய்யப்படும் பூஜைகளை போன்று இங்கு தெப்பம் விட்டு பூஜைகள் நடைபெறுவது ஐதீகம் எனக் கூறப்படுகிறது.
இதில், கோபசந்திரம், ஆலியாளம், காமன் தொட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு ஆற்று வெள்ளத்தை பூஜை செய்து வழிபட்டனர்.