உள்ளூர் செய்திகள்

துடியலூரில் காரில் தடை செய்யப்பட்ட 650 கிலோ குட்கா கடத்தல்

Published On 2022-11-24 14:58 IST   |   Update On 2022-11-24 14:58:00 IST
  • 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
  • துடியலூர் போலீசார் துடியலூர்-வெள்ளக்கிணர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கவுண்டம்பாளையம்,

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் பெரிய நாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் மேற்பார்வையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திரபிரசாத், காவலர்கள் வீரமணி உள்ளிட்டோர் துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 650 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த 3 பேரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் அன்னூரை சேர்ந்த பொன்ராஜ், திருப்பூரை சேர்ந்த மதியழகன், கருமத்தம்பட்டியை சேர்ந்த கவுரி சங்கர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 650 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், ரூ.66 ஆயிரத்து 650 பணம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News