உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் நாட்டு மருந்து கடை உரிமையாளர் கொலை:சொத்து விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்றேன்-கைதான மைத்துனர் வாக்குமூலம்

Published On 2023-07-31 08:46 GMT   |   Update On 2023-07-31 08:46 GMT
  • அறையில் இருந்த முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு செல்வம் தப்பிச்சென்றார்.
  • முருகேசன் சமீபத்தில் ஒரு சொத்தை விற்றார். அதற்கான தொகையாக அவருக்கு ரூ.55 லட்சம் கிடைத்தது.

தென்காசி:

நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 35). இவர் சென்னை தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார்.

கொலை

இவரது உடன்பிறந்த அக்காள் கணவர் பாளையை சேர்ந்த நாராயண மூர்த்தி(45). இவரது நண்பர்கள் தாழையூத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் தங்கதுரை(28), செல்வம்(26). இவர்கள் 4 பேரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு குளிக்க சென்றனர். அங்கு தனியார் விடுதியில் 4 பேரும் தங்கிய நிலையில் அறையில் இருந்த முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு செல்வம் தப்பிச்சென்றார்.

இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை யில் பணத்திற்காக மைத்துனர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசனை கொன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக நாராயண மூர்த்தி போலீசில் கூறியதாவது:-

முருகேசன் சமீபத்தில் ஒரு சொத்தை விற்றார். அதற்கான தொகையாக அவருக்கு ரூ.55 லட்சம் கிடைத்தது. அதில் எனக்கும் தொழில் செய்ய கொஞ்சம் பணம் கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். இதற்காக எனது நண்பர்கள் 2 பேரிடமும் பேசினேன். அவர்கள் போட்டு கொடுத்த திட்டத்தின்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நெல்லையில் ஒரு தனியார் விடுதிக்கு இதேபோல் சென்றோம். ஆனால் அங்கு வைத்து அவரை கொலை செய்ய முடியவில்லை.

இதனால் 2-வது முறையாக திட்டம் தீட்டி குற்றாலத்திற்கு அழைத்து வந்து கொலை செய்தோம். செல்வம் கொலை செய்ததாக கூறிவிட்டு நாங்கள் தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாராயணமூர்த்தி கூறிய அனைத்தையும் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News